Monday 23 July 2018

27.7.2018 சந்திர கிரகணம் ( வெள்ளிக்கிழமை)


 



ஒவ்வொரு ஆண்டும்  இப்பூவுலகில்  நான்கு கிரகணங்கள் சம்பவிக்கின்றன, பொதுவாக இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும்  ஏற்படுகின்றன, சில வருடங்களில் மூன்று சந்திர  கிரகணம் கூட சம்பவிக்கும்.

ராகு, கேது  என்ற இரு கிரகமும்  சூரிய கிரகணம்,  சந்திர கிரகணம்  ஏற்பட  காரணமான கிரகங்களாகும், ஒன்பது கிரகங்களில்  இந்த இரு கிரகங்களும்  சாய  கிரகங்கள்  என்றழைக்கப்படும் நிழல் கிரகங்களாகும்,  விண்வெளியில்  சூரியனது வட்டப்  பாதையும்  சந்திரனது  வட்டப்பாதையும்  வெட்டும் புள்ளிகள் ராகு, கேது என  அழைக்கப்படுகிறது.


சூரிய கிரகணம்  அமாவாசை அன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமி  அன்றும்  சம்பவிக்கும்,

சூரிய கிரகணம் 

ஜோதிட  சாஸ்திரபடி  பன்னிரண்டு ராசிகளை  சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது  இருவரும் ஒரே  ராசியில் குறிப்பிட்ட   பாகை  கலை  அளவில் சேர்ந்திருக்கும்  பொழுது  அமாவாசை ஏற்படுகின்றது,  "அமவாஸ" என்ற வடமொழி  சொல்லுக்கு  ஒன்றாக இருத்தல்  என்று  பொருள், சூரியனும், சந்திரனும்  ஒன்றாக  குறிக்கும் "அமவாஸ"  என்னும் சொல்  அமாவாசை என்றானது.

அமாவாசை அன்று  சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க  இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ  அல்லது  கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------
 
சந்திர கிரகணம்

பெளர்ணமி  அன்று  சூரியனும் சந்திரனும் சற்றேறக் குறைய 180 பாகை  வித்தியாசத்தில்  இருப்பார்கள், அதாவது  சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருக்கும்.

பெளர்ணமி  அன்று  இவ்விருவரும்  ராகு அல்லது கேதுவின் பிடியிலே இருக்கும் போது  சந்திர கிரகணம் ஏற்படுகிறது.




அறிவியல்ரீதியாக  சூரியன், பூமி, சந்திரன்  ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது  சந்திரனை  பூமியின்  நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே  சந்திர கிரகணம் ஆகும்.     

சந்திர கிரகணம் முழுமையாக ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், அரைகுறையாக  ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும்  அழைக்கப்படுகிறது.

சூரிய, சந்திரர்கள் கிரகணம் நிகழும் பொழுது ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும், கேதுவின் பிடியில் இருந்தால் கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கப்படுகிறது.


பஞ்சாங்களில்  கிரகணத்தை  பற்றி குறிப்பிடும் போது ஸ்பரிச காலம்,  நிமீலன காலம், மத்யகாலம்,  உ ன்மீலன காலம்,   மோக்ஷ  காலம்  என ஐந்துவித கால முறைகளால் குறிக்கபட்டிருக்கு
ம். 

 ஸ்பர்ச காலம்  என்றால் கிரகணம் ஆரம்பமாகும் நேரமாகும் , நிமீலன காலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைந்து  கண்ணுக்கு தெரியாமல் போகும்  நேரமாகும்,  மத்யகாலம் என்றால்  சந்திரன் முழுவதும்  மறைய  ஆரம்பித்த  நேரத்திற்கும்  மீண்டும் தெரிய ஆரம்பித்த நேரத்திற்கும்  மத்தியில் உள்ள  நேரமாகும், உன்மீலன காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடியிலிருந்து  சந்திரன் வெளிபட்டு  கண்களுக்கு தெரிய ஆரம்பிக்கும்  நேரமாகும். மோக்ஷ  காலம் என்றால்  ராகு அல்லது கேதுவின்  பிடி யிலிருந்து  சந்திரன்  முழுவதும் விடுபட்டு  கண்களுக்கு தெரிய  ஆரம்பிக்கும்  நேரமாகும்.

கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் உணவு உண்பது கூடாது, கிரகணம் ஏற்படும் நாளில்  தாய், தந்தை  மற்றும் மூதாதையருக்கு திதி கொடுக்க கூடாது,  மறுநாளே  இதை செய்ய வேண்டும்.

கிரகணம் பிடித்திருக்கும்  காலத்தில் திருக்கோவில்கள் நடை அடைக்கப்படிருக்கும். கர்ப்பிணி பெண்கள்  வீட்டை விட்டு  வெளியே வரக்கூடாது  என்றும்  சாஸ்திரம் கூறுகிறது.

எந்த நட்சத்திரத்தில்  கிரகணம்  சம்பவிக்கின்றதோ அந்த  நட்சத்திரம் அதற்கு முன், பின்  உள்ள நட்சத்திரங்க்களில் பிறந்தவர்கள் சாந்தி செய்து கொள்வது அவசியம்.



வரும் 27.7.2018 ஆடி மாதம் 11ம் தேதி  வெள்ளிக்கிழமை அன்று இரவு  உத்திராடம்  நட்சத்திரத்தில்  கேது  கிரகஸ்த சந்திர கிரகணம் ஏற்படும்,  இது இந்தியாவில் தோன்றும்.



ஸ்பரிசம் ( ஆரம்பம் ) :11.54 P.M,    மத்யம் : 1.52 A.M  (28.7.2018),  மோக்ஷம்  : 3.49 A.M (28.7.2018) 

  
உத்திராடம், கிருத்திகை,  உத்திரம்,  பூராடம்,  திருவோணம்   நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் (திருக்கோவில்களில் அர்சக்கரிடம்  கூறி ) சாந்தி செய்து கொள்வது அவசியம்.


நன்றி
ஆஸ்ட்ரோ  கண்ணன்