Monday 17 August 2015

நாகசதுர்த்தி, கருட பஞ்சமி




இந்து சமயத்தில் நாகங்களின் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இருந்து வருகிறது. சிவ பெருமானின் கழுத்தில், அம்பிகையின் தலையின் பின்புறம், விநாயகரின் இடுப்பில், முருகனின் காலடியில், ஆதிசேசனே பெருமாளுக்கு படுக்கையாக இருக்கிறது. 

நம் உடலிலும் "குண்டலினி சக்தி' நாக வடிவாகவே இருப்பதாக யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

நாகங்களால் ஏற்படும் தோஷங்கள், சாபங்கள் வாழ்வில் நற்பலனை தடுத்து தீய பலன்களை தருகிறது. ஜாதகத்தில் ராகு, கேது எனும் (நிழல் ) சர்ப்ப கிரகங்கள் இருக்கும் நிலையை கொண்டு இவற்றை அறியலாம். 

திருமண தடை, புத்திர பாக்கிய தடை போன்றவற்றை ஏற்படுத்துவதில் இந்த சர்ப்ப கிரகங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன. 

ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாகசதுர்த்தியும், மறுநாள் பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகின்றது. 

இவை நாகங்களை வழிபாடு செய்வதற்கு சிறந்த தினங்களாகும். 

சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்றி, புற்றுமண்ணைப் பிரசாதமாக அணிந்து கொள்வார்கள். அன்றைய தினம் ஒன்பது நாக தேவதைகளான அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகியோர்களின் நாமத்தைச் சொல்லிக்கொண்டே புற்றுக்குப் பால் ஊற்றிப் பூஜிப்பது நல்லது. 

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு நான்கு மனைவிகள். அவர்களில், கத்ரி என்பவளிடத்தில் பிறந்தவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால், தீயில் விழுந்து இறக்கும்படி தாய் கத்ரி சாபம் கொடுத்தாள். அந்த சாபத்தினால், பல நாகங்கள் மன்னன் ஜனமேஜயன் நடத்திய சர்ப்ப யாகத்தின்போது அக்கினியில் வீழ்ந்து இறந்தன. அஸ்தீகர், ஜனமேஜயனது யாகத்தைத் தடுத்து, நாகர்களுக்குச் சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமி தினம். 


இந்த நாக பஞ்சமி விரதத்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். புத்திர பாக்கியம் உள்ளவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், புத்திரர்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். 


விரதம் கடைப்பிடிக்கும்போது, நமது சக்திக்குத் தகுந்தபடி தங்கத்திலோ, அல்லது பிற உலோகத்திலோ பாம்பின் உருவம் செய்து அதை ஒரு கலசத்துள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். 

....................................................................................................................................... 
கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, சுபர்ணீ என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், சுபர்ணீ அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், சுபர்ணீ க்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் சுபர்ணீ தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். 


கருடன் கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். 

அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன், அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று மகிழ்ச்சியடைந்து, தன் தாயை வணங்கித் தேவலோகம் சென்றான். 

தேவலோகத்தில், காவல் புரிந்துகொண்டிருந்த தேவர்களுக்கும், கருடனுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. இறுதியில், கருடன் வெற்றி பெற்று, தேவேந்திரனை வணங்கி, அவனிடமிருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்றுவந்து கத்ருவிடம் கொடுத்தான். மூவருக்கும் ஏற்பட்டிருந்த அடிமை வாழ்வை நீக்கி, ஆனந்தமாக வாழ வழி செய்தான், கருடன். அந்தக் கருடன் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றது. 

ஆவணி -1 (18.8.2015) நாக சதுர்த்தி 
வளர் பிறைச் சதுர்த்தியில் பெண்கள் விரதமிருந்து நாக தெய்வத்தை வழிபடும் நாக சதுர்த்தி விரத தினம். 


ஆவணி -1 (19.8.2015) கருட பஞ்சமி 
ஆவணி மாத சுக்லபட்ச பஞ்சமியில் வருவது "கருட பஞ்சமி விரதம்' எனப்படும். ஸ்ரீ கருடாழ்வார் ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த தினம். 


இந்த நாக பஞ்சமி, கருட பஞ்சமி விரதங்களைக் கடைப்பிடிப்பதால், குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களும், மகிழ்ச்சியும் ஏற்படும். 


Friday 14 August 2015

ஆடி பூரம்


ஆடி மாதம் பூரம்  நாளானது சூடிக் கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் அவதரித்த தினமாகும். 

ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள நந்தவனத்தில், ஒரு துளசிச் செடியின் அடியில், கலியுகம் பிறந்து 98வதாக வந்த நளவருடம் ஆடிமாதம் வளர்பிறையில் பஞ்சமி திதியும், பூர நட்சத்திரம் கூடிய நன்னாளில் பெரியாழ்வார், பூமித்தாயின் அம்சமான ஆண்டாளைக் கண்டெடுத்தார்.

அவளை கோதை என்னும் பெயரிட்டு வளர்த்து வரும்படி வடபெருங் கோயிலுடையானும் அருள் பாளித்தார். 

இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை, இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.

கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.

இந்த கோதை கண்ணனை நினைத்து பாவை நோன்பு நோர்ப்பதாக எழுதிய 30 பாடல்கள்தான் திருப்பாவை. 

வைணவத்திருக்கோவில்களில் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படு கின்றது.
..........................................................................................

ஆடிப்பூரம்  அன்னை பார்வதிக்கு  உரிய  திருநாளாகும். இந்த நாளில் தான் உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. 

ஆடி பூரம்  அன்று  அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி, வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வது   திருமணம் ஆகாத   பெண்களுக்கு    திருமண  கைகூடுவது,   குழந்தை பாக்கியம்  பெறுவது,  கல்வி, செல்வ  நிலையில்  உயர்வு பெறுவது போன்ற  அற்புதமான  பலன்களை  வழங்கக்கூடிய தாகும்.

ஆடிப்பூரம்: ஆடி 31ம் தேதி 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை, 

இந்நாளில் பூர நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் வழிபாடு செய்து மிக சிறந்த பலன்களை  பெறலாம்.

"ஜோதிட ரத்னா " 
ஆஸ்ட்ரோ கண்ணன் 

Thursday 13 August 2015

ஆடி அமாவாசை


ஜோதிட சாஸ்திரபடி பன்னிரண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் சுற்றி வரும் போது இருவரும் ஒரே ராசியில் குறிப்பிட்ட பாகை கலை அளவில் சேர்ந்திருக்கும் பொழுது அமாவாசை ஏற்படுகின்றது, "அமவாஸ" என்ற வடமொழி சொல்லுக்கு ஒன்றாக இருத்தல் என்று பொருள், சூரியனும், சந்திரனும் ஒன்றாக இருப்பதை குறிக்கும் "அமவாஸ" என்னும் சொல் அமாவாசை என்றானது. 

ஜோதிடத்தில் சூரியன் ஆன்மா மற்றும் தந்தைக்கு காரகர் . சந்திரன் தாய் மற்றும் சரீரம், மனத்திற்கு காரகர். சூரியன் ( சிவன் ), சந்திரன் ( சக்தி ) ஐக்கியமாக இணைந்திருக்கும் இந்நாளில் மறைந்த தந்தை வழி , தாய் வழி முன்னோர்களை நினைத்து சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் மூதாதையர்களின் ஆசி பெறலாம். குடும்பத்தில் தடைபட்ட காரியங்கள் நிறைவேறி நன்மைகள் பல பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. 

மாதந்தோறும் வரும் அமாவாசை திதிகளில் தை, ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவை யாக இருக்கின்றன, அவற்றில் ஜோதிட ரீதியாக கடகத்தில் சூரியனுடன் ஆட்சி பெற்ற சந்திரன் இருக்க வரும் ஆடி அமாவாசை கடலில் நீராடி பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் செய்து முன்னோர்களை வழிபாடு செய்வதற்கும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்வதற்கும் உகந்த நாள். 

ஆடி 29 ம் தேதி 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஆடி அமாவசை 

பாவங்கள் போக்கும் பிதுர்வழிபாட்டுக்குரிய தலமாக ராமேஸ்வரத்தில் மற்றும் வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு, திருச்சி, காவேரி நதிக்கரை போன்ற சிவன்  திருக்கோவில் அருகில் இருக்கும் நீர் நிலைகளில் ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்வது சிறப்பு.